Saturday, April 14, 2018

நிறப்பிரிகை

விடுமுறை நாளொன்றின்
முன் மதிய வேளை.

வீட்டின் எதிரே
வேப்ப மர நிழலில் அமர்ந்து
இலைகளின் இடைவெளியில்  இறங்கும்
வெயிலுக்கு எரிச்சலுற்று
"இந்த வெயிலு வேற " என்று
அலுத்துக் கொண்டே
வீட்டுப் பாடங்களைச்
செய்துகொண்டிருக்கிறாள் சிறுமி.

"பாப்பா , அம்மா இருக்காங்களா ?" என்ற குரல்
வெளிவாசல் பக்கமிருந்து வர
நிமிர்கிறவள்,
காம்பவுண்ட் கிரில் கேட்டினைப் பிடித்தபடி
கறுத்த நிறத்தில்
ஒடிசலான  தேகத்தில்
தலை நரைத்து,  
துருத்திய முன் பற்கள் தெரிய
சிரித்தபடி நின்றுகொண்டிருந்தவளை
அசுவராஸ்யமாய்ப் பார்த்துவிட்டு
 வீட்டை நோக்கி
"அம்மா, யாரோ வந்திருக்காங்க " என்றுவிட்டு
வீட்டுப்பாடத்தைத் தொடர்கிறாள் .

"யாரு" என்றபடியே
வெளியில் வந்த அவளின் அம்மா,
கேட்டினைப் பிடித்தபடி
நின்றிருந்தவளைப் பார்த்ததும்
"மல்லிகாம்மா" என்றபடி
சந்தோஷக் கூச்சலிட்டபடியே
கேட்டினைத் திறக்க ஓடுகிறாள்.

மல்லிகாம்மாவை
அத்துணைப் பிரியமாய் கட்டிக்கொண்டு
அளவளாவியபடி
வீட்டிற்குள் அழைத்துச் செல்வதை
அதே அசுவாரஸ்யத்துடன்
பார்த்துக்கொண்டிருக்கிறாள் சிறுமி .

வீட்டிற்குள் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம்
தாத்தா , பாட்டி , அப்பா என
அனைவரின் குரலிலும்
அம்மாவிடம் இருந்த அதேப் பிரியம்
மல்லிகாம்மாவிடம்
குவிவதன் ஓசைக் கேட்டவள்
எழுந்து மெல்ல வீட்டிற்குள் செல்கிறாள் .

"இவங்கள தெரியுதாடி உனக்கு,
நீ குழந்தையா இருந்தப்போ
இவங்கக் கூடவேதான் இருப்ப,
இவங்கதான் உனக்கு சாப்பாடு ஊட்டணும்,
இவங்கதான் எல்லாமும் செய்யணும்னு
அவ்வளவு அடம் பண்ணுவ "
என்று அம்மா  சொன்னதும் ,
சிறுமியின் முகம் வருடி
திருஷ்டி முறித்த மல்லிகாம்மா ,
"நல்லா வளந்திடுச்சுல்ல" என்று
அதே வெள்ளந்திச் சிரிப்போடு சொன்னதில்
வெட்கம் கொள்கிறச் சிறுமி
மீண்டும் வேப்ப மரம் நோக்கி ஓடி வருகிறாள் .

வீட்டுப்பாடத் தாள் மீது கிடந்த ஸ்கேலில்
அவளுக்கொரு குட்டி வானவில்லை
வரைந்து வைத்திருக்கிறது வெய்யில்,
வானவில்லைக் கண்டு
பெரிதாய் விரிகிற
அவளின் கண்களில் சுரக்கிறது
வெய்யிலின் மீதான முதல் சிநேகம் .

Thursday, November 22, 2012

மழைநாளின் ரயில் பயணம்

ஜன்னலில் நீர்த் துளிகளின் நடனம்
சட்டென்று நிகழ்ந்து விட்டது
ஒரு கொலையும் ஒரு தற்கொலையும்.
மீண்டும் நடனம்
மீண்டும் கொலை
மீண்டும் தற்கொலை
கண்முன்னே நடந்துகொண்டே இருக்கிறது
கையாளாகதவனாய் நான்.

கிறுக்கல்கள்-9

காணிக்கை
சாமியாடி செல்வராசுவின்மீது,
முனியப்பன் சாமி வந்து
அருள் வாக்கு சொல்கிறபோதெல்லாம்,
சாமி தனக்கு காணிக்கையா கேட்பது மட்டும்
செல்வராசு பொண்டாட்டியின்
அன்றைய தேவையை ஒட்டியே
அமைந்துவிடுகிறது.


ஊர் வாய்
நாலு கழுத வயசாச்சு
ஒரு கல்யாணங்காச்சி பண்ணலாம்னா
கையில காக்காசு துட்டு இல்ல,
வெவசாயமும் படுத்துப் போச்சு,
இதுக்கு மேலயும் தாங்காது சாமின்னுதான்
கேரளாவுல சுவீட்டுக்கடையில 
வேல பாக்குற தெக்கி வீட்டு பால்ராசுப்பய
போன பொங்கலுக்கு வந்தப்போ 
வேல வாங்கி தாறேன்னு சொன்னது 
நெனப்பு வரவும்,
ரவையோட ரவையா 

கெளம்பி ஓடிரலாம்னு
முடிவு பண்ண அன்னைக்கா
பக்கத்துவீட்டு பரிமளம் 

தூக்குல தொங்கணும்.


பிறவி
ஏகம்பா பாட்டிக்கு
82 வயசாச்சாம்,
நட ஒட கொறஞ்சதிலிருந்தே
இப்படித்தான் இந்தத் திண்ணையில குந்தி
ரோட்டுல போற வர சனங்ககிட்ட
பேச்சக் கொடுத்து பொழுத ஓட்டுவா,
கெழவிக்கு வேற வேலையில்லன்னு
முணுமுணுத்துகிட்டே போற சனங்களில்

ஒன்னு ரெண்டு பேராச்சும்
அவளின் நலத்தை விசாரிப்பாக,
அப்பயெல்லாம் கெழவி இப்படித்தான் சொல்லும்,
”ஆயிசுக்கு ஒன்னும் இப்போ பாதகமில்லைனு
கீரத்தூரு சோசியர் சொல்லிப்புட்டாரு,

ஆனா எந்திரிக்க கொள்ள முடியாம இப்படியே
குந்திருக்கதுக்கு  போயி சேரலாம்
என்னத்துக்கு இனிமே ஆயுசு” என்பாள்.
பக்கத்துல போற நாயிக எதுவும்
ஊளையிடுற சத்தம் கேட்டா மட்டும்
வாரி சுருட்டி எந்திரிச்சி
ஊனுகோலுக்கு வச்சிருக்க 

மூங்கிக் கழியக்கொண்டு
நாயப்பார்த்து பெலம் கொண்ட மட்டும் வீசுவா.
சிங்கத்திடமிருந்து தப்பிக்கும்  
மானோட மிரட்சிய
கண்ணுல தேக்கியபடி.

Tuesday, July 24, 2012

கிறுக்கல்கள்-7

புங்கை மரத்தினடியில் 
முந்தைய நாளின் 
பெருமழை வெள்ளம் 
ஓடிய தடங்களில் படிந்திருக்கும் 
மணலின் குளுமையை
அனுபவித்திருக்கின்றீர்களா?
இல்லையென்றால் உங்களுக்கு
முற்றிலும் குளிரூட்டப்பட்ட 
அறைகள் சொர்க்கமாய்த் தெரியக்கூடும்.

கிறுக்கல்கள்-6

இந்த வீட்டில் ,
முன்பு குடியிருந்தவன்
விட்டுச் சென்ற
சில பொருட்களின் ஊடாக
அவனின் வாழ்கையை
நான் கேளாமலேயே என்னிடம் 
சொல்லிக்கொண்டிருக்கிறான்.

Monday, June 18, 2012

கிறுக்கல்கள்-5

அந்தப் பூங்காவின் நடை பாதையில்
தன் தோழியை செல்போனில்
படம் பிடிக்கும் அவளுக்கு
இடைஞ்சலாய் இருக்குமே என்று
தயங்கி நிற்கிறேன் நான்.

”ம் சீக்கிரம் எடு” என்று
உதடு பிரிக்காமல்
அவசரப்படுத்துகிறாள் தோழி. 

இவளோ ”கொஞ்சம் சிரி,
கொஞ்சம் தலையை சாய்” என்றபடியே
அவளுக்கான பாவனைகளை 
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்.

அவளும் சிரிக்கிறாள்,தலை சாய்க்கிறாள்.
இவளுக்கோ திருப்தியின்றி
மீண்டும் மீண்டும் பாவனைகளைச் சொல்ல
அதுவரை அப்படியேச் செய்தவள்
ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துவிட்டு
சட்டென வெட்கத்தோடு 
ஓடி மறைந்துவிட்டாள்.

இவளோ ”ஒழுங்கா போஸ் கொடுக்காம ஓடிட்டா”
என்று தனக்குத் தானே சினுங்கி நிற்கிறாள்.

அவள் ஓரக்கண்ணால்  பார்த்த கணத்தில்
இவள் என்ன செய்துகொண்டிருந்தாளாம்.

Monday, April 12, 2010

கிறுக்கல்கள் 3

அழுக்கு ஜன்னல்களுக்கான மவுசு
அலங்கார வாசற்கதவுகளுக்கு
எப்போதுமே இருப்பதில்லை
அழகான பெண்களிருக்கும் வீடுகளில்...!

@@@@@@@@@@@@@@@@@@

நடுநிசி தாண்டி நீளும்
அலைபேசி உரையாடல்களில்
அடுத்தென்ன பேசுவதெனப் புரியாது
இடையிடையே நிலவும்
சிலநொடி பெருமௌனங்களிலெல்லாம்
பிறகு பேசலாமென
அழைப்பைத் துண்டிக்க நினைப்பேன்
`அப்புறம் சொல்லுங்க` என்று
மீண்டும் ஆரம்பிப்பாயே
அதில்தானடி ஒளிந்திருக்கிறது
அடர்த்தியாய் நம் காதல்..!

@@@@@@@@@@@@@@@@@@

அலைபேசியில் யாரோடோ
கொஞ்சிப் பேசியபடி வரும்
பின்னிருக்கை வசிகரக்குரலியைத்
திரும்பிப் பார்க்கச் சொல்லி
அடம்பிடிக்கும் மனதை
நாகரிகம் கருதி அடக்குகிறேன்,
தொடர்ந்து கேட்கும்
அக்கொஞ்சல் மொழியில்
தொலையாத ஏதோ ஒன்றைத்
தொலைத்ததாய் தேடும் பாவனையில்
என் நிறுத்தம் வருமுன்
அவளைப் பார்த்துவிட்டே இறங்குகிறேன்
ஜென்மம் ஈடேரியதொரு திருப்தியோடு..!