Monday, June 18, 2012

கிறுக்கல்கள்-5

அந்தப் பூங்காவின் நடை பாதையில்
தன் தோழியை செல்போனில்
படம் பிடிக்கும் அவளுக்கு
இடைஞ்சலாய் இருக்குமே என்று
தயங்கி நிற்கிறேன் நான்.

”ம் சீக்கிரம் எடு” என்று
உதடு பிரிக்காமல்
அவசரப்படுத்துகிறாள் தோழி. 

இவளோ ”கொஞ்சம் சிரி,
கொஞ்சம் தலையை சாய்” என்றபடியே
அவளுக்கான பாவனைகளை 
சொல்லிக்கொண்டே இருக்கிறாள்.

அவளும் சிரிக்கிறாள்,தலை சாய்க்கிறாள்.
இவளுக்கோ திருப்தியின்றி
மீண்டும் மீண்டும் பாவனைகளைச் சொல்ல
அதுவரை அப்படியேச் செய்தவள்
ஓரக்கண்ணால் என்னைப் பார்த்துவிட்டு
சட்டென வெட்கத்தோடு 
ஓடி மறைந்துவிட்டாள்.

இவளோ ”ஒழுங்கா போஸ் கொடுக்காம ஓடிட்டா”
என்று தனக்குத் தானே சினுங்கி நிற்கிறாள்.

அவள் ஓரக்கண்ணால்  பார்த்த கணத்தில்
இவள் என்ன செய்துகொண்டிருந்தாளாம்.

No comments: