Sunday, December 23, 2007

ஆமாவாசை சிந்தனைகள்...!

நிலவே!
நீ முழுதாய்த் தெரிந்தால்
காதலியின் முகத்துக்கும்,
பாதியாய்த் தெரிந்தால் இதழுக்கும்,
அதிலும் குறைந்தால்
புருவத்துக்கு ஒப்பிடுகிறார்கள்,
உனக்குப் புகழ்ச்சியே
பிடிக்காது போலும்
அதனால்தான்
முகம் காட்ட மறுக்கிறாயோ....!

என்ன குற்றம் செய்தாளென்று
தலைமறைவாகிப் போனாள்
நிலாப் பெண்....!

வானத்தில் ஹோலி
யார் வீசியது கருப்புச் சாயத்தை
நிலாப் பெண்மீது...!

எந்த காதலனோடு
இரவோடு இரவாக
ஓடிப் போனாள்
நிலாப் பெண்.....!

ஏய் நிலவே!
நீ இருந்தாலும்
இவ்வளவு கல்நெஞ்சக் காரியா?
உன்னை காட்டித்தானே
என் குழந்தைக்கு சோறூட்டுவேன்
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
எங்கே போனாய்?!

பகலெல்லாம் என் காதலன்
கொடுத்த வெளிச்சத்தில்
எதைச் சாதித்தீர்கள்
என்றெண்ணித் தானோ என்னவோ
சும்மாவே இருந்து விட்டாய்....!

நீ, நல்ல பெண்தான்,
ஆனாலும் சமயங்களில்
பகலிலும் தெரிவாய்,
இப்படி நேரம் கெட்ட நேரத்தில்
வெளியே வரலாமா?-ஒரு வேளை
உன் சூரியக் காதலனை
உளவு பார்க்க வந்து,
அதனால் அவன் கோபத்திற்கு ஆளாகி
பொசுங்கி போயிருப்பாயோ.....!

ஏய் நிலவே!
எனக்கு உதவி செய்ய
மறைந்து கொண்டாயா?-இல்லை
என் தொழிலைக் காணச் சகிக்காமல்
முகம் மூடிக் கொண்டாயா
புரியாமல்த் தவித்தது
திருட்டுப் பய மனசு...!

ஆம், இன்று அமாவாசை....!

Monday, December 10, 2007

சங்கு சுட்டாலும்...... !!

அரைமணி நேரமா நின்னுகிட்டு இருக்கேன்,எப்போ பாரு நாம வர்றப்போ மட்டுதான் இந்த பஸ் நேரத்துக்கு வராம இம்சையை கொடுக்கும், உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது,வழிந்த வியர்வையைத் துடைத்தபடியே பஸ் வருதா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்,யாரோ சட்டையைப் பிடித்து இழுப்பது போல் உணர்ந்துத் திரும்பினேன்.

"அய்யா... தர்மம் பண்ணுங்க சாமி.."-தட்டை ஏந்தியபடி பிச்சையெடுக்கும் கிழவி.

"ஏய் சில்லறை இல்ல போ அங்கிட்டு" என்று என் காத்திருத்தலின் எரிச்சலை அவளிடம் காட்டினேன்.

போவேனா என்பது போல் நகராமல் கெஞ்சிக் கொண்டிருந்தாள் கிழவி.

"இருக்கிற எரிச்சலில் இது வேற" முணுமுணுத்தபடியே சட்டைப் பையில் இருந்த நூறு ரூபாய்,ஐம்பது ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பையைத் துழாவினேன் இருந்த சில்லறைக் காசில் தேடிப் பிடித்து ஒரு ஐம்பது காசை எடுத்துத் தட்டில் போட்டேன்,

ஒரு பெரிய கும்பிடுப் போட்டு கிழவி நகர்ந்தாள்,

திடீரெனெ நான் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கு எதிரே கல்லூரி மாணவர்களும்,ஆசிரியர்கள் சிலரும் ஒன்று கூடினர்,அவர்களின் கையில் வெள்ள நிவாரண நிதி என்று எழுதிய கைத்தட்டியை வைத்திருந்தனர்.

ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் பெய்த மழைவெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுகளையும், அதனால் பாதிக்கப் பட்ட மக்களின் அல்லல்களையும் உருக்கமாக எடுத்துக்கூறி, இறுதியாக "எங்கள் மாணவர்கள் உங்களிடம் உண்டியல் ஏந்தி வருவார்கள் தாங்கள்,தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் நாலாப் பக்கமும் உண்டியலை ஏந்திச் சென்று கொண்டிருந்தனர், நான் நின்று கொண்டிருந்த நடைமேடைக்கும் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.

"இவங்களுக்கெல்லாம் வேற வேலை இல்ல" என்று நினைத்தபடியே பஸ் வருதாவெனப் பார்த்துக் கொண்டிருந்தேன்,

எங்க ஊர் பஸ்ஸைத் தவிர மற்ற அனைத்துப் பஸ்ஸும் வந்து போய்க்கொண்டிருந்தது.

அதற்குள் உண்டியல் ஏந்திய மாணவன் என்னை மிக நெருங்கிவிட்டான், என்னிடம் வருவதற்குள் பஸ் வந்து விட வேண்டுமென்று படபடப்போடு நான்.

"சனிய புடிச்ச வண்டி" இன்னும் வரல,

மாணவன் என்னை நெருங்க நெருங்க, முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டேன்,அப்படியே என்னிடம் கேட்டாலும் "இல்லையென சொல்லிட வேண்டியதுதான் " என நினைத்தபடியே நின்றுகொண்டிருந்தேன்.

"தம்பி" என யாரோ கூப்பிடுவதைப் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்,சற்று முன் என்னிடம் பிச்சை கேட்ட கிழவி,அந்த மாணவனைக் கூப்பிட்டு தன் தட்டில் உள்ள சில்லறையெல்லாம் அந்த உண்டியலில் போட்டுக் கொண்டிருந்தாள்".

"யாரோ என் முகத்தில் காரி உமிழ்ந்தது போல் இருந்தது!".


(சர்வேசனின் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய சிறுகதை,இது எனது முதல் முயற்சி,குறையிருப்பின் பின்னூட்டத்தில் கூறுங்கள்,திருத்திக் கொள்கிறேன்.)

Monday, December 3, 2007

மழையில் அவள் மழலையாய் நான்..


அது ஒரு மழைக்காலம்,
மழை நின்ற சிறு இடைவெளியில்
பள்ளி செல்ல ஆயத்தமாய்
வீட்டினின்று வெளியே வருகிறாய்,
உன் வீட்டிற்கும் சாலைக்குமான‌
இடைவெளி நிர‌ம்பிய‌ ம‌ழைநீரில்
கால் படாமல் இருக்க
கற்களை வைத்திருந்தார்கள்,
நீ ,ஒரு கல் விட்டு ஒரு கல்
தாண்டியபடியே வருகிறாய்,
உன் பாதம் படா கற்களின் ஏக்கம்
உனக்குத் தெரியுமா?!

பிறகு உன் தோழியர் கூட்டத்தோடு
இணைந்து பயணத்தைத் தொடர்கிறாய்,
எல்லோரும் ஒரே மாதிரியான
சீருடைதான்அணிந்து செல்கிறீர்கள்;
ஆனாலும் நீ தனித்துத் தெரிகிறாய்..!

ஏதோ நினைத்த‌வ‌ளாய் திடீரென ஓடி,
ஒரு மரத்தின் கீழ் நின்று
அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்,
தோழியரும் ஆர்வமாய் ஓடி வந்து
என்னவென்று வினவியபடியே
அண்ணார்ந்து பார்க்கையில்,
தணிந்திருந்த ஒரு கிளையை
யாரும் அறியாமல் உலுக்குகிறாய்,
இலை தங்கிய மழை நீர்
தோழியரை நனைக்க,
அவர்கள் பொய் கோபத்தோடு துரத்த
நீ முன்னே ஓடுகிறாய்,
என்ன தவம் செய்தது சாலை..!

நீ உலுக்கிய கிளையை
எனக்கு நானே உலுக்கி
நனைந்து களித்து
உன்னைத் தொடர்கிறேன்,

அடுத்து எதிர்ப்பட்ட
கால்வாய் மதகடிப் பாலத்தில்
ஒரு புறம் இறங்கி
காகிதக் கப்பலை விட்டு
மறுபுறம் ஓடி வந்து பார்க்கிறாய் ,
மறுபுறம் வெளிவந்தக் கப்பல்
அருகில் இருந்த சுழியில் மாட்டி,
நான் உன்னைச் சுற்றுவது போலவே
சுற்றுவதைப் பார்த்து,
ஆனந்தப்பட்டு துள்ளிக் குதிக்கிறாய்,

பள்ளியை நெருங்கிய சமயத்தில்
மீண்டும் தூறல் விழத்தொடங்க
எல்லோரும் அவசரமாய்
குடை விரிக்கையில்,
நீ மட்டும் குடை பிடிக்கவில்லை,
க்கணத்திலிருந்து எனக்குக்
குடையே பிடிக்கவில்லை....!