Thursday, January 31, 2008

வாடா மலர்!!


அழகு மலர்களுக்கு
ஆயுசைக்
குறைவாகப் படைத்த
பிரம்மன் மீது
கோபம் கொண்டு நிமிர்ந்தேன்,
வாடா மலராய் உன் முகம்
எதிர் வீட்டு ஜன்னலில்,
பிரம்மனின் வித்தைப் புரிந்தது!!

மோகம்.....!

வைகறைப் பொழுதிலே
மெல்ல வீசும் மந்த மாருதம்,
அறையில் பரவும் இளம் வெளிச்சம்,
தூரத்து ஒற்றைக் குயிலோசை,
உறக்கம் கலைந்தும் நீளும் சயனம்,
எழலாமென நினைத்திருப்பேன்;
வேண்டாமென வெல்லும் சோம்பல் ,
எனது நெஞ்சில் பதிந்திருக்கும்
உனது நேற்றைய கூந்தல் பூ,
பூவை எடுத்து ரசித்திருப்பேன்
எதிரே தேனீர் கோப்பையோடு நீ
வெட்கப்பட்டு நின்றிருப்பாய்,
உன் ஈரக் கூந்தல் வாசத்தில்
சோம்பலையும் வெல்லும் மோகம்...!

காக்கா டாக்டரு,காக்கா டாக்டரு.......!


அந்த சம்பவம் நடந்து ரெண்டு மாசத்துக்கப்புறம் இப்போதான் ஊருக்கு வரேன், உள்ளுக்குள் கொஞ்சம் பயத்தோடவே வீட்டை நெருங்கினேன்.

இவ்வளவுக்கும் நேத்தே அம்மாகிட்ட இதப் பத்தி கேட்டப்போ,"ரெண்டு மாசம் ஆயிடுச்சு அதெல்லாம் மறந்து போயிருக்கும், நீ பயப்படாம வா" அப்படின்னு சொன்னாங்க,இருந்தாலும் அச்சமாத்தான் இருந்துச்சு.

வீட்டுக்கு பக்கத்துல வந்ததும் மெதுவாக அந்த மரத்தை நோக்கிப் பார்த்தேன், அங்கே அது இருக்கிற மாதிரி தெரியல, அப்பாடா!மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. என்னயுமறியாமல் அனிச்சயாய் ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே வீறுநடை போட்டு வீட்டை நோக்கி நடந்த போதுதான் அந்த சத்தம்,

"கா.. கா... கா... கா.. கா" சத்தம் கேட்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போச்சு.

எந்த சத்தம் கேட்கக் கூடாதுன்னு இவ்வளவு நேரம் பயந்துக்கிட்டு வந்தேனோ அதே சத்தம்.

"நீ இன்னுமா மறக்கல"என்று நினைத்தபடியே கைகளை தலைக்கு மேலே விசிறிக்கிட்டே வீட்டை நோக்கி ஓடினேன்.

வீட்டுக்குள் நுழைந்தும் கொஞ்ச நேரம் அது கத்திக்கிட்டே இருந்துச்சு.

ஒன்னுமில்லீங்க, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஊருக்கு,விடுமுறையில வந்திருந்தப்போ வீட்டிற்கு முன்னால் இருக்கிற இந்த வேப்ப மரத்து நிழலில் உட்கார்ந்து அன்றைய தினசரியப் புரட்டிக் கிட்டிருந்தேன், அப்போ எதோ கிழே விழற சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்தேன். பிறந்து ரெண்டு மூனு வாரமே ஆன ஒரு காக்கா குஞ்சு மரத்திலிருந்துக் கீழே விழுந்துத் தத்தளிச்சுக் கிட்டிருந்துச்சு.

ஐயோ பாவம்னு இறக்கப்பட்டு அதை கையில் எடுத்து மீண்டும் அதன் கூட்டிலேயே வைச்சுடலாம்னு எத்தணித்த போதுதான் கவனித்தேன் அதன் காலில் விரல் ஒன்று முறிந்து தொங்கிக்கொண்டிருந்ததை, வாயின் ஒரத்திலும் லேசாக இரத்தம் வழிந்து கொண்டிருந்துச்சு. ரொம்ப கவனமாக கையாண்ட போதும் அந்த முறிந்த விரல் தனியாக கீழே விழுந்துருச்சு.சரி எதாவது முதலுதவி செய்யலாமேன்னு வீட்டுக்குள் கொண்டுவந்தேன்.

"ஐயையோ,அதத் தூக்கி வெளியிலே வீசுடா, வீட்டுக்குள்ளே கொண்டு வராதே தரித்திரியம்"-அலறினாள் அம்மா.

"போம்மா,இதப் பார்த்தா பாவமா இல்ல"

"இந்த மாதிரி கிறுக்குத் தனமெல்லாம் பன்னாதேன்னா கேக்குறானா இவன்" அம்மா கத்திக்கிட்டே இருந்தாள்.

நான் கொஞ்சம் கூட காதிலே வாங்கிக்கவே இல்ல, கொஞ்சம் மஞ்சள் தூளை எடுத்து அடிப்பட்ட இடத்திலே தடவி பிறகு ஒரு கூடையில் கவுத்துப் போட்டு கொஞ்சம் சோத்துப் பருக்கையை அதன் முன்னால் தூவினேன்,கழுத்தை சாய்த்து என்னையேப் பார்த்துக் கொண்டிருந்துச்சு.

காக்கைக்கு மட்டுமா அது பொன்குஞ்சு என் பார்வைக்கும் அப்படிதாங்க தெரிஞ்சது.

இப்படியே ஒரு நாலு நாள் எனது பராமரிப்பில் வைத்திருந்து பிறகு ஓரளவுக்கு காயம் ஆறியவுடன் அதை மீண்டும் கூட்டிலேயே வைத்துவிட எண்ணி மரத்திலேறி வைக்க முயன்றபோது,எங்கிருந்துதான் வந்துச்சுன்னே தெரியல ஒரு காக்கா, சற்றும் நான் எதிபாராத தருணத்தில் தன் கால் நகங்களைக் கொண்டு அழுத்தமாக என் தலையில் கீறிட்டுச் போச்சு .

தாய் காகமா இருக்கும் போல,அவசர அவசரமாக காக்கா குஞ்சை கூட்டில் வைத்துவிட்டு நான் இறங்குவதற்குள் மேலும் இருமுறை அதன் தாக்குதலுக்கு ஆளானேன்.

அன்னைக்கு ஆரம்பிச்ச தாக்குதல் வீட்டிலிருந்த ஒரு வாரத்துக்கும் தொடர்ந்தது,வீட்டை விட்டு என் தலை வெளியில் தெரிந்தால் போதும், எங்கிருந்து வருதுன்னே தெரியாது "மாடார்" ன்னு தலையில் அடிச்சிட்டு போகும்.

அந்த ஒருவாரமும் தலையிலே தொப்பியோடுதான் திரிஞ்சேன். விஷயம் கொஞ்சம் கொஞ்சமா எங்க தெருவுக்கே பரவ ஆரம்பிச்சு எல்லாரும் என்னை "காக்கா டாக்டரு, காக்கா டாக்டரு" ன்னு நக்கல் பண்ண ஆரம்பிசுட்டாங்க.

இது கூட பரவாயில்ல,"என் பணி நக்கல் செய்து கிடப்பதே" ங்கிற மாதிரி ஒரு ஆள் எங்க ஊர்ல இருக்கான், ரொம்ப சாதரணமா எல்லாரையும் நக்கல் பண்ணிட்டே இருப்பான், இந்த விஷயம் அவனுக்குத் தெரிஞ்சா சும்மா விடுவானா, அன்னைக்கு ஒரு நாள் நண்பர்களோடு நின்னு பேசிட்டு இருந்தேன், அந்த சமயம் பாத்து இந்த ஆள் அந்தப் பக்கமா வந்தான்,

"என்ன மாப்ள,எப்போ ஊர்ல இருந்து வந்தாப்ல"-என்னைப் பார்த்துதான் கேட்டார்.

"நாலஞ்சு நாளாச்சு"- நானும் ரொம்பப் பொறுப்பா பதில் சொன்னேன்.

"நல்ல உத்தியோகமாமே,பயலுவ எல்லாம் பேசிகிட்டாய்ங்க"

"ம்ம்"

"பரவால்லடா,நீ ஒருத்தந்தனாவது,ஒழுங்கா படிச்சு நல்ல வேலைக்கும் போயிட்டே, உங்க அப்பா அம்மாவுக்கு மட்டுமில்ல நம்ம ஊருக்கே பெருமையான விஷயமுடா இது"-ரொம்பவே புகழ்ந்து பேசினாரு.

அப்படியே உச்சி குளுந்து போயி நின்னேன்.மத்த பசங்கலெல்லாம் செம்ம கடுப்புல நின்னுட்ருந்தானுங்க.

"சரி மாப்ள,அப்படியே நேரங்கடச்சா,நம்ம வூட்டுப் பக்கம் வந்திட்டுப் போ,கோழி ஒன்னு சொனங்குனாப்ல இருக்கு,நீதான் நல்ல வைத்தியம் பாப்பியாமுல்ல"-ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போயிட்டுருந்தான், கூட நின்ன அத்தன பேரும் சிரிச்சானுங்க பாருங்க, சரி அந்தாளு மட்டுமா அப்படின்னா, ஊர்ல உள்ள இத்துணூண்டு வாண்டுங்ககூட,
"அண்ணே பின்னாடி காக்கா வருது ஓடுங்க ஓடுங்க" -ன்னு சொன்னுச்சுங்க. இப்படி ஆளாளுக்கு அவனுங்க பங்குக்கு வெறுப்பேத்தினாய்ங்க.ஏன்டா இத பண்ணனோம்னு ஆயிடுச்சு.

அப்புறம் விடுமுறை முடியறதுக்குள்ளேயே திரும்பி நான் வேல பாக்குற ஊருக்கே போயிட்டேன். அதுக்கு அப்புறமா இப்போதான் வறேன்.

நான் ஓடிவந்தத பார்த்த அம்மா, இன்னுமா அந்த சனிய மறக்கலன்னு சொல்லிகிட்டே மரத்துல உட்கார்த்திருந்த அதப் பார்த்து ,"ஏ சனியனே உன் புள்ளய காப்பாத்தப் போயி இப்படி எம்புள்ளய படுத்தியெடுக்கிறியே"ன்னு கோபமா சத்தம் போட்டாங்க.என்னவோ அதுக்குப் புரியபோறமாதிரி.

கொஞ்ச நேரங்கழிச்சு மறுபடியும் மெதுவா வாசல் பக்கம் வந்தேன். என் தலை வெளில தெரிஞ்சதோ இல்லையோ கத்த ஆரம்பிச்சுடுச்சு.

அப்படியே நகராம நின்னு பார்துகிட்டே இருந்தேன் அது கத்திக்கிட்டே பறந்து வந்து நான் நிற்கும் இடத்திற்கு சற்று தூரத்தில் அமர்ந்து கழுத்தை சாய்த்து என்னையே பார்த்தது, அப்போதுதான் கவனித்தேன் அதன் ஒரு காலில் மூன்றே விரல்தான் இருப்பதை.அதை கண்ட நொடியில் என்னையுமறியாமல் சந்தோஷத்தில் கத்தினேன்,

"அம்மா, இங்கே சீக்கிரமா கொஞ்சம் சாதம் எடுத்துகிட்டு வா!" .

Monday, January 28, 2008

கருவைத் தொலைத்த கவிதை!!

ஏகாந்தத்தின் பிடியில்
தோன்றிய கருவொன்றை
கவிதையாக்க நினைத்து
எழுதி பார்க்கையில்
ஏதோ குறைவதாயுணர்ந்து,
மீண்டும் மீண்டும் யோசித்து
அழகு வார்த்தைகள்
இட்டு நிரப்பி,

எதுகை மோனை சரி செய்து,
வாசித்தப் பொழுது
தொலைந்து போயிருந்தது-கரு!!

Tuesday, January 8, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்!!

புதுமணத் தம்பதியருக்கா,
பூவையர் கூந்தலுக்கா,
வரவேற்பறை அலங்காரங்களுக்கா,
வாசனைத் திரவியங்களுக்கா,
ஆலய பூஜைக்கா,
ஆடி அடங்கியவரின் சவத்திற்கா,
எதற்காக உயிர்விடப் போகிறோம்
என்ற சிந்தனையில்,
பூக்களில் உறங்கும் மௌனங்கள்!!