Thursday, November 22, 2012

கிறுக்கல்கள்-9

காணிக்கை
சாமியாடி செல்வராசுவின்மீது,
முனியப்பன் சாமி வந்து
அருள் வாக்கு சொல்கிறபோதெல்லாம்,
சாமி தனக்கு காணிக்கையா கேட்பது மட்டும்
செல்வராசு பொண்டாட்டியின்
அன்றைய தேவையை ஒட்டியே
அமைந்துவிடுகிறது.


ஊர் வாய்
நாலு கழுத வயசாச்சு
ஒரு கல்யாணங்காச்சி பண்ணலாம்னா
கையில காக்காசு துட்டு இல்ல,
வெவசாயமும் படுத்துப் போச்சு,
இதுக்கு மேலயும் தாங்காது சாமின்னுதான்
கேரளாவுல சுவீட்டுக்கடையில 
வேல பாக்குற தெக்கி வீட்டு பால்ராசுப்பய
போன பொங்கலுக்கு வந்தப்போ 
வேல வாங்கி தாறேன்னு சொன்னது 
நெனப்பு வரவும்,
ரவையோட ரவையா 

கெளம்பி ஓடிரலாம்னு
முடிவு பண்ண அன்னைக்கா
பக்கத்துவீட்டு பரிமளம் 

தூக்குல தொங்கணும்.


பிறவி
ஏகம்பா பாட்டிக்கு
82 வயசாச்சாம்,
நட ஒட கொறஞ்சதிலிருந்தே
இப்படித்தான் இந்தத் திண்ணையில குந்தி
ரோட்டுல போற வர சனங்ககிட்ட
பேச்சக் கொடுத்து பொழுத ஓட்டுவா,
கெழவிக்கு வேற வேலையில்லன்னு
முணுமுணுத்துகிட்டே போற சனங்களில்

ஒன்னு ரெண்டு பேராச்சும்
அவளின் நலத்தை விசாரிப்பாக,
அப்பயெல்லாம் கெழவி இப்படித்தான் சொல்லும்,
”ஆயிசுக்கு ஒன்னும் இப்போ பாதகமில்லைனு
கீரத்தூரு சோசியர் சொல்லிப்புட்டாரு,

ஆனா எந்திரிக்க கொள்ள முடியாம இப்படியே
குந்திருக்கதுக்கு  போயி சேரலாம்
என்னத்துக்கு இனிமே ஆயுசு” என்பாள்.
பக்கத்துல போற நாயிக எதுவும்
ஊளையிடுற சத்தம் கேட்டா மட்டும்
வாரி சுருட்டி எந்திரிச்சி
ஊனுகோலுக்கு வச்சிருக்க 

மூங்கிக் கழியக்கொண்டு
நாயப்பார்த்து பெலம் கொண்ட மட்டும் வீசுவா.
சிங்கத்திடமிருந்து தப்பிக்கும்  
மானோட மிரட்சிய
கண்ணுல தேக்கியபடி.

No comments: