Tuesday, July 29, 2008

காதலைச் சொன்ன கணங்கள்.

பின்தொடர்கிறேன்
எனத் தெரிந்ததும்,
அனிச்சையாய் குறையும்
உன் நடையின் வேகத்திலும்.....

எதிர்பாரா
என் வருகையால்,
தடுமாறும்
உன் உரையாடலிலும்....

உன் வீட்டை கடக்கையில்
இல்லாத யாரையாவது
உறக்க விளித்து,
உன் இருத்தலை
அறியத் தரும்போதும்...

என் பெயரைக் கொண்ட
ஜவுளிக் கடையின் பையில்
நீ புத்தகம் சுமந்து வரும்போதும்....

உன் பிறந்த நாளில்,
உன் கையாலேயே
எல்லோருக்கும் இனிப்பு வழங்கி,
எனக்கு மட்டும்
தோழியிடம் கொடுத்து ...
வேண்டுமென்றே
என்னைத் தவிர்த்த போதும்...

அறிந்து கொண்டேன்
என் மீதான உன் காதலை..!