Monday, January 28, 2008

கருவைத் தொலைத்த கவிதை!!

ஏகாந்தத்தின் பிடியில்
தோன்றிய கருவொன்றை
கவிதையாக்க நினைத்து
எழுதி பார்க்கையில்
ஏதோ குறைவதாயுணர்ந்து,
மீண்டும் மீண்டும் யோசித்து
அழகு வார்த்தைகள்
இட்டு நிரப்பி,

எதுகை மோனை சரி செய்து,
வாசித்தப் பொழுது
தொலைந்து போயிருந்தது-கரு!!

2 comments:

அன்புடன் புகாரி said...

நல்ல கவிதை நாடோடி இலக்கியன். வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஒரு மடல் வந்திருக்கிறது. அது என் முகவரிக்கு வந்திருக்கிறது. பாருங்கள். குருமூர்த்திசார் என் ஒரத்தாடு பள்ளி ஆசிரியர்.

அன்புள்ள புகாரி,

உங்களின் அன்புடன் இதயம் படித்துக்கொண்டிருக்கிறேன்.
அவ்வப்போது எழுதுவேன்.

மொட்டுக்களைப் பார்த்துமகிழ்வது ஆசிரியப்பணி.
மொட்டுகள் மலர்ந்து மணம் வீசுவதைப்பார்க்க எத்தனை ஆசிரியர்களுக்கு
கொடுத்துவைத்திருக்கும்!
நீங்கள் மணம் வீசுகிறீர்கள்.

உங்களுக்கு கிருஷ்ணன் ஆசிரியராக இருந்தார் என்பது நான் அறியவந்த செய்தி.
இன்றும் உடல் நலத்தோடு என்னுடைய வீட்டருகில்தான் கடிகாரம்
பழுதுபார்த்துக்கொண்டு இருக்கிறார்.

குனிந்ததலை நிமிராமல் தொழில் செய்துகொண்டிருப்பவரை ஒருநாள்
தொந்தரவுசெய்து உங்களைப்பற்றி கூற எண்ணியிருக்கிறேன்.

அது யார் நாடோடி இலக்கியன்?
அவருடைய முகவரி இந்த நள்ளிரவில் தேடியும் கிடைக்கவில்லை.

நானும் கருக்காடிப்பட்டி பள்ளியில் கணித ஆசிரியராக அவர் குறிப்பிட்ட
காலத்தில் பணியாற்றியிருக்கிறேன்.
சவரிநாதனுடன் இணைந்து கருக்காடிப்பட்டி மாணவர்களுக்கு சவரிநாதனுடைய
வீட்டில் வைத்து டியூஷன் எடுத்தேன்.

இந்த கடிதத்தை அந்த நாடோடி இலக்கியனுக்கு அனுப்பித்தரமுடியுமா?

அந்த நாடோடி இலக்கியன் என்னுடன் தொடர்புகொள்ள இசைவாரா?

அன்புடன்,
மு.குருமூர்த்தி

cheena (சீனா) said...

அன்பின் நண்ப

பல கவிதைகள் கருவினைத் தொலைத்துவிட்டு அலங்காரச் சொற்களால் நிரப்பப்பட்டு எழுதப்படுகின்றன. உண்மை உண்மை