Tuesday, August 21, 2007

ஒரு கணிப்பொறியாளனின் கனவு!!

ஒரு விடுமுறை நாளின்
மதிய நேரத் தூக்கத்தில்,
செந்நிறப் புரவியில்
வெண்ணிற ஆடையில்
தேவதையொருத்தி வந்தாள்,

மெல்ல என் கரம் பற்றி
"வா "என்றாள்,
"எங்கே?" என்றேன்,
"சொன்னால்தான் வருவாயோ?"-என்றாள்,
சற்றைக்கெல்லாம்
அவளைப் பின் தொடர்ந்தேன்
மலர்களால் நிறைந்த
ஒரு வனத்தின் நடுவே
மஞ்சை பஞ்சாக்கி
அமைத்த ஒரு மஞ்சத்தில்
என்னை இருத்தினாள் ,
எதற்காக இங்கே
என்பதாய் பார்த்த என்னிடம்,

"இன்னுமாப் புரியவில்லை?" என்றாள்,
அப்பொழுதான் கவனித்தேன்
அந்த காமம் வழியும் கண்களையும்,
விரகத்தில் தவித்த உதடுகளையும்,
இனியும் என்ன தாமதம் என்று
தாவி அணைக்க முயல்கையில்,
அலறியது என் கைபேசி
திடுக்கிட்டு விழித்தேன்
அலுவலக நண்பனின்
ஜாவா சந்தேகம்,
சந்தேகம் தீர்த்து முடிக்கையில்
மீண்டும் கனவின் நினைவு வர,
விட்ட இடத்திலிருந்து
தொடர முயற்சித்தேன்
முடியவில்லை,
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது....!

12 comments:

நா. கணேசன் said...

நல்ல கவிதை.

அன்புடன்,
நா. கணேசன்
ஹ்யூஸ்டன், டெக்சாசு

L N Srinivasakrishnan said...

ஐயையோ! நாளைக்கு மனைவிமாரே எங்கேயாவது நம்மகிட்டே கடவுசொல் கேக்க போறாங்க! மாற்றுகவி ஓண்ணு அர்ஜென்ட்டா பாடு சாமி - கைவசம் 'குக்கி' மாதிரி இருக்கட்டும்

நாடோடி இலக்கியன் said...

//நல்ல கவிதை.//

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கணேசன்.

//ஐயையோ! நாளைக்கு மனைவிமாரே எங்கேயாவது நம்மகிட்டே கடவுசொல் கேக்க போறாங்க! மாற்றுகவி ஓண்ணு அர்ஜென்ட்டா பாடு சாமி - கைவசம் 'குக்கி' மாதிரி இருக்கட்டும் //

L N Srinivasakrishnan,
மாற்றுக் கவியெல்லாம் எதற்குங்க,குக்கியா இந்த வார்த்தயை தயாரா வைத்திருங்க "உன்னைப் போல அழகி உண்டா" அதுதான் default கடவுச் சொல்.வருகைக்கு நன்றி.

cheena (சீனா) said...

கனவைத் தொடர கடவுச் சொல் - அருமையான சிந்தனை. வாழ்த்துகள்.

சிவ பூஜையில் கரடி என்பார்கள். உச்ச கட்டத்தில் ஜாவா சந்தேகம். என்ன செய்வது.

//சென்னிறப் புரவியில் // - செண்ணிறப் புரவியில் - சரியா

//இன்னுமாப் புரியவில்லை // - "ப்" வருமா ?

//முயல்கயில்,// - முயல்கையில் - சரியான சொல்லாக இருக்குமா

நாடோடி இலக்கியன் said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு.சீனா,
சென்னிற அல்லது செண்ணிற இன்னும் எனக்கு குழப்பமாகவே இருக்கிறது,
நண்பர்களிடம் ஆலோசித்துவிட்டு மாற்றிவிடுகிறேன்.
பிழை சுட்டலுக்கு மிக்க நன்றி .

P N A Prasanna said...

நல்ல பதிவு. தற்செயலாக வந்தேன். கருத்துரை வழங்கினேன்.தமிழ் எக்காளம் வந்து கருத்துரை வழங்குக.

துபாய் ராஜா said...

//என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது....!//

அருமை.அருமை.

'செந்நிறப் புரவியில்' என்று வருவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

நாடோடி இலக்கியன் said...

நன்றி துபாய் ராஜா,(திருத்தி எழுதிவிட்டேன் நண்பா,சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி)

RAGUNATHAN said...

//என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது....!//

கற்பனை அருமை.
செந்நிற புரவி என்பதே சரி
:)

ஜியா said...

அருமையான கவிதை தல..

தமிழ் said...

/விட்ட இடத்திலிருந்து
தொடர முயற்சித்தேன்
முடியவில்லை,
என் கனவும் கூட என்னிடம்
கடவுச்சொல் கேட்டது....!/

அருமை

நாடோடி இலக்கியன் said...

நன்றி ரகுநாதன்,
நன்றி ஜியா,
நன்றி திகழ்மிளிர்.